அவதாரம் - அப்துல் ரகுமான் (பித்தன் கவிதை தொகுப்பு)

 அவதாரம் - அப்துல் ரகுமான்


எல்லோரும்

மலையின் மீது

ஏறி கொண்டிருந்தபோது

பித்தன் மட்டும் 

கீழே 

இறங்கிக் கொண்டிருந்தான்.

 

'நீ ஏன் 

இறங்கி கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டேன். 


'மேலே செல்வதற்காக' 

என்றான். 


அவன் மேலும் சொன்னான்;

 

கீழே விழும் 

விதை தான் 

மேலே செல்கிறது. 


ஏற்றம் 

இறக்கத்தில் தான் 

நீரை முகக்கிறது.


தராசில் 

கனமான தட்டே

கீழே இறங்குகிறது. 


அரியாசனத்தில்  

ஏறுகிறவனுக்கல்ல; 

இறங்குகிறவனுக்கே 

இதிகாசம் கிடைக்கிறது.


இறங்கும் மேகமே 

பூமியின் 

தாகம் தீர்க்கிறது.


பறக்கும் போதல்ல 

அருந்து விழுந்த பிறகே 

பட்டத்திற்கு 

அமைதி கிடைக்கிறது. 


ஆரோகணத்தில் அல்ல அவரோகணத்தில் தான் 

ஸ்வரங்கள் 

கூட்டை அடைகின்றன.


இறங்குவது 

பரவசம்; 

அதனால் அல்லவா 

அருவி பாடுகிறது. 


பறப்பவன் 

முடியைக்  

காணாமல் போகலாம். 

இறங்குபவன் 

அடியைக் 

கண்டு விடுவான்.


பழுத்த கனியே 

கீழே இறங்கும்.


31.10.2021.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்